Tuesday, April 19, 2011

பூ - மனிதத்தின் அடையாளம்



ஐந்து இறந்து பிறந்தாலும்
ஆறாவதை அயராமல் சுமக்கும்
தாய்போல 
அடிக்கடி நிலம் பிளந்தும்
அவர்கள் சாடி ஓடவில்லை
வேறு நிலம் தேடி வாழவில்லை

காலிழந்தும் கையிழந்தும்
வலியிழந்தும் வாளிழந்தும் 
எதிரியை மீண்டும் போரிட
அழைக்கும் போராளியாய் 
நிலம் விரித்தும்
கடல் புகுந்தும்
வரிசையில் உணவிற்காய் வரம்பு மீறியதில்லை
வீடிழந்தவரை வீதியில் உறங்க விட்டதில்லை.

அணுகுண்டுகளால் அழித்த அமெரிக்காவிற்கு
பூமரங்களை பரிசாய் அளித்தார்கள்
தடமில்லாமல் அழிந்த இடத்தை
அமைதியின் நகரமாய் ஆக்கினார்கள்

கடும்பனியால் இலைகள் இழந்தாலும்
கிளைமுழுதும் பூக்களை முதலில்
பூக்கும் இம்மரங்கள் அப்பூமியில் 
தோன்றியதில் ஆச்சர்யமில்லை...

No comments: