Sunday, July 23, 2006

விதவை !

வெள்ளைக் காகிதத்தில் ஒற்றையாய்
ஓர் கவிதை ! வாசகன் இல்லாமல்.

வீட்டிலுள்ள தலைவன் புகைப்படம் கூட
அவன் நினைவினை அதிகமாய் தீண்டியதில்லை..

சாலையோர பூக்கடையும்,
சேலையோர சிறுமுடிச்சும்,
காலை நேர கடுங்குளிரும்,
மாலை நேர காத்திருப்பும்

கண்டு கொல்லும், கண்டு கொள்ளா(த)
முடிச்சவிழ்ந்த மொட்டை

அடுத்த மாத மண அழைப்பிதழ்கள்
அடுக்களையில் அழ வைக்கும்..

ஆடி மாதம் ஆண்டுகளாய் ஆகி
படுக்கையிலே முகம் நனைக்கும்

நெறி தவறா நடந்தாலும்
நெடியுடைய ஊர் பேச்சை
தாரை மிதித்து நடந்திடுவாள்
ஊரை சகித்து தலை நிமிர்வாள்

கை முளைத்து, கால் முளைத்து
கடைக்கு செல்ல தந்தைக்காய்
காத்திருக்கும் குழந்தை உள்ளம்
தாயிடமே கேட்டிடுமே ! செத்திடுவாள் சில நிமிடம்...



பிள்ளையினை வழியனுப்பி
தொல்லைகளை தனுள் அமிக்கி
நேரம் வரக் காத்திருந்து
பிள்ளைக்கு மணம் முடிப்பாள்

குழந்தைகள் காதல் செய்யும் முதலிரவில்
மனமும், உடலும் ஒன்றாய்
கட்டிலில் உறங்கும்
அவளுக்கும் அது மீண்டதோ(மோ)ர் முதலிரவு !!


அன்புடன்,
செல்வேந்திரன்.

Saturday, July 08, 2006

[காட்சி - அருவி விழும் பாறையில் அழகி அமர்ந்திருக்கிறாள் ]

அழகற்ற அருவி அமர்ந்து அமர்ந்து..
அழகற்று போன என் மேல் அமர்ந்து
அழகாய் ஆக்கிய அழகியே !

சீக்கிரம் எழுந்துவிடு !
பனியாய் நான் உருகுவதற்கு முன் !!

நான் உருகிவிட்டால் அருவிகள்
ஆறாய் ஆகி உன்னை அள்ளிச்
சென்றிடுமோ என்ற அச்சத்தில்
கல்லாய் அமர்ந்திருக்கிறேன் !!

சில்லென்று ஒரு பயணம் !!



நீண்ட நாள் வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையில், முதன்முதலாய் சேரும் நாள் வெள்ளியன்றாய் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்களில் அவனும் ஒருவன்.
ஆம் ! நீச்சல் தெரியாமல், ஆற்றில் மீண்டவனுடைய அகமகிழ்ச்சியில் அலுவலகம் விட்டு வெளி நடந்தான் ஓர் அழகான வெள்ளிக்கிழமையன்று.

காதுகளை இசையால் அடைத்துக் கொண்டு...
கண்களை இமையால் விசிறிக் கொண்டு…
விரைவாய் நடந்து வந்தான் Full Stop க்கு. Bus=Full நாமறிந்த வழக்கம்தானே..

புத்தம் புதிய(இருபது வருடங்களுக்கு முன்) பேருந்து ஒன்று சற்று முன்னிருந்த
Traffice signal யையும், மக்கள் signal யையும் மதிக்காமல் சில தொலவு தள்ளி நின்றது.பொங்கிய பாலாய் பயணிகளும், பாத்திரமாய் பேருந்தும் நகரப் புழுக்கத்திலும், நகரமுடியாப் புழுக்கத்திலும் சூடாய் இருந்தார்கள்.

கூட்டதில் எவன் ஏறுவானென மனதிற்க்குள் கூவியவன் அழகாய் அருகில் நின்றவள் அதில் ஏறியதால்தானும் ஏறினான்.பயணச்சீட்டை வாங்க காசை
தேடிக் கொண்டே அவள் முகத்தை வெளிச்சத்தில் முழுதாய் ..
.இல்லை ! இல்லை ! முழு நிலாவாய் பார்த்தான்.

தேடித் தேடி காசு கிடைத்தது ! ஆனால் அவன் மனது தொலைந்தது..
"வடபழனி ஒன்று" என்று அவளிடம் காசை நீட்டினான்.

சிரித்தாள் ! அவள் சிரித்தாள் ..
முழித்தான் ! இவன் முழித்தான் ...

சில நொடியில் மூளை அவன் தலையில் தட்டியது...பின் திட்டியது..
"மனது தானே தொலைந்தது .. நானுமா ??"...ஏறிய இடத்திற்க்கே
Ticket கேட்டால் எவள்தான் சிரிக்காமலிருப்பாள் ?...

"Sorry...வேளச்சேரி ஒன்று.."

சிரித்தபடி வாங்கி கொடுத்தாள்.மற்றவர்களுக்காய் எடுப்பதாய் ஏழெட்டு tickets எடுத்தான்.வெளியே இருட்டாக இருந்ததாலும், இயற்கை காட்சி இல்லாததாலும் அவளை மட்டும் பார்த்து வந்தான்.அவள், இவன் பார்ப்பதை அனைத்து முறையும் பார்த்த போதிலும், இவன் இரண்டு முறை மட்டுமெ மாட்டிக் கொண்டதாய் நினைத்திருந்தான்.

இப்பொழுதான் கவனித்தான் நிலவை சுற்றிய விண்மீன்களை போல அவன் வயதினர் பலர் அவளையே பார்த்திருந்தனர்.பேருந்தில் கூட்டமாய் உடல்கள் பயணம் செய்தாலும், உள்ளங்கள் ஒன்றாய் பயணிப்பதில்லை...ஆனாலும், சன்னலோரப் பயணிகள் மட்டும் வான்னிலவை ரசிப்பார்கள் ஒருவருக்கொருவர் அறியாமலே...அதைப் போல வட்டமாய் அப்பெண்ணிலவை பார்த்து வந்தார்கள்..

ஆயுள் இழந்த பேருந்து ..இவள் இருந்ததனால் என்னவோ ஆயுளை நீட்டிக்க வேகமாய் ஓடிக் கொண்டு இருந்தது.இவளைப் போல அழகிகள் இருப்பதனால்தான் இன்னும் பழைய பேருந்துகளை மாற்றாமல் லாபம் பார்க்கிறது போக்குவரத்துத் துறை.

வண்டி கண்கலங்கி நின்றது.ஆம் ! அவளிறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது போலும்.அவளும், அவளைச் சுற்றிய பார்வைகளும் படியில் இறங்கத் தொடங்கின.மெல்ல நடந்த அவள் பின் மெல்ல நடந்த இவன் மனது " உடலை மறந்து வைத்துவிட்டோமே என..மீள முடியாமல் மீண்டும் பேருந்தில் ஓடிவந்து ஏறி அதன் பொருளை பற்றிக் கொண்டது.

மீண்டும் மூளை திட்டியது."என்னமோ..இன்றுதான் புதிதாய் நடப்பதை போல் உருகுகிறாய்".அதனை சமாளித்து முடிப்பதற்க்குள், பாதம் "போதுமடா...என்னை மட்டும் வேலை வாங்குகிறாய்...சீக்கிரம் ஏதாவது செய் .." என்றது.அருகில் உள்ள இருக்கைக்கு அருகில் சென்றான்.அதில் அமர்ந்திருந்தவன் இவனை எதிர்க்கட்சிக்காரனை போல் ஏளனமாய் பார்த்தான்.பார்வையை மாற்றி
சன்னலின் வழியே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற பாவைகளின் தந்தைகளை, தேவையில்லாமல் பணம் செலவழித்துவிட்டதாக திட்டிக் கொண்டே வந்தான்.

கிண்டியில் நின்று மீண்டும் வண்டி வேகமாய் ஓடத் தொடங்கியது.படியினை பார்த்தான்..பதுமை ஒன்று பக்குவமாய் ஏறி வந்தது.சற்று நேரம் கழித்து அவளிடம் கேட்டான் " கிண்டி ஒரு ticket" என்று......

Wednesday, July 05, 2006

திருமண அழைப்பிதழ் !

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகிறது...
பத்திரிக்கைகள் வரதட்சணையில்
அச்சடிக்கப் படுகிறது...

Monday, July 03, 2006

கூண்டுக் கிளிகள் !!



வீட்டின் சன்னலின் வழியே
வீதியை பார்த்து வடுந்தினான்...
கைரேகை தேடி அலைந்தவன்
கைரேகையில் ஒரு கூண்டுக்கிளி...

Saturday, July 01, 2006

ஈழத்தில் ஓர் ஓலம் !


அகம் மகிழும் ....
வீட்டில் அடுப்பெரிந்தால் !
வீட்டில் நெருப்பெரிந்தால் ?



வீட்டை விட்டு
வெளியே செல்லவும்,
வீட்டை விட்டு விட்டு
வெளியே செல்லவும் முடியவில்லை !
நானும்,அதுவும் மீண்டும்
சந்திப்போமா என ??



வெடிச்சத்தம் வெறுத்த எங்கள்
உள்ளம் தீபாவளியை
எப்படி தேடும் !!



பாடமென்ன படித்து வந்தாய்
பிள்ளையிடம் வினவிக் கேட்டால்
மறைந்திருந்து சுடுவெதெப்படி,
மாட்டிவிட்டால் சாவதெப்படி ..


சொல்லி நடந்தான்
துப்பாக்கி மட்டையுடன் !!



கடல் தாயே !
அகதியாய்,அனாதையாய் ஆகவிடாமற்
செய்யவா அன்றே அழைக்க வந்தாய் !
சிலரை அழைத்தும் சென்றாய் !!


நூறடி நிலம் வேண்டாம்
ஆறடி நிலம் போதும்
அதுவும் அவரவர் விரும்பும் போது
அடுத்தவன் விரும்பும் போதல்ல...



போர்கள் நிற்காத பூமியிலே
பூக்களும்தான் பூப்பதில்லை !
பூ பூக்காத பூமியிலே
உயிர் வாழ்ந்தும் பயனுமில்லை !
பயினிலா செயலினை செய்வதற்கு
பாவியவர் தயங்கவில்லை !
தயங்கிவிடும் ஆறறிவே
தடுத்திடுவோம் போர்கள்தன்னை !!


கொள்ளியிடும் ஆசையெல்லாம்
மூட நம்பிக்கை ஆனதடா !
அள்ளியிடும் பிணங்களிலே
அன்னை பிணமும் போகுதுடா !!

மொழி பேசி,இனம் பேசி
அழிந்தவரை போதும்..
நிம்மதியாய் சாப்பிடுவோம்
ஒரு வேளை சாதம் !!