Monday, March 07, 2011

இமையோடு உதிர்ந்த கண் !!!


மேற்கே - I :
அவள் தனியாக இருந்தாள்.மணி இரவு ஒன்பது பதினொன்று.வீட்டில் அனைத்து விளக்குகளும்
அணைக்கப்பட்டு இருந்தன.விளக்குகள் கூட்டத்திற்கு உகந்தது.இருட்டு மட்டுமே தனிமைக்கு
உகந்தது.செல்போன் கையிலே இருந்தது.அவனுடைய அழைப்பிற்காகத்தான் காத்திருக்கிறாள்.
நாளை காலை பதினோரு மணிக்கு எல்லாம் சந்திக்கலாம் என்றிருந்தான்.
இப்பொழுதான் பேசி முடித்திருந்தான்.அவள் அசை போட்டுக் கொண்டிருக்கிறாள்...
"என்ன மன்னிச்சிடு?"
"ம்"....
"இன்னைக்கு தான் நம்ம போறதா பிளான் பண்ணிருந்தேன்.கடைசில இங்க கொஞ்சம்
பிரச்சனை.ஆனா ..நாளைக்கு கண்டிப்பா நான் வருவேன்.நீ கிளம்பியிரு.நேரில் பேசிக் கொள்ளலாம்.
நீ எதுக்கும் கவலைபடாத...சாரி மா..."
"சரி ..சரி ..எனக்கு புரியுது..ஆனா முக்கியமா ஒரு விஷயம்..."
"என்ன...அடுத்து போன் பேசுனா ஹலோ சொல்லி பைல முடிங்க..மன்னிச்சிடுனு ஆரம்பிச்சி
சாரி ல முடிக்காதீங்க.."
"மன்னிச்சிடு சாரி "...
"மீண்டுமா?"..புன்னகையுடன் இருவருடைய தொடர்பும் துண்டிக்கபட்டது.
ஆனாலும் அவள் மனது ஏனோ பதை பதைத்தது. போன் பண்ணினால், சூழ்நிலை சரியாக இருக்கும்பொழுது தானே அழைப்பதாக மட்டும் சொல்லிவிட்டான்.எப்பொழுதும் கலகலப்பாக இருப்பான்.இரண்டு வாரமாக சரியாக பேசவில்லை.கண்டிப்பா வருவான என.குழப்பத்துடனே அவள் உறங்கி போனாள்.

கிழக்கே - I :

"குட் மோர்னிங் மேடம்..வி ஆர் காலின் பிரம் கிரெடிட் கார்டு கம்பெனி.."
"யா டெல் மீ"
"டூ யு ஹவ் சம் டைம் டு டிஸ்கஸ் ?"
"மே இ நோ ஹொவ் டிட் யு கெட் மை நம்பர்"
"வி ஹவ் வெரி குட் ஆபேர் பார் யு.ப்ரீ ஹஸ்பன்ட் வித் ப்ரீ கிரெடிட் கார்டு"
"ஐ அல்ரெடி டிசைடு டு டைவர்ஸ் மை ஹஸ்பன்ட்...சோ திஸ் இஸ் வெரி குட் ஆபேர்"
"அடிப்பாவி..."
"பின்னே.." ஆபீஸ் ல இருந்து பண்ணா எனக்கு தெரியாதா...என்னமோ பிஸி ஆ இருப்பேன்
போன் லாம் சான்ஸ் எ இல்லனீங்க.."
"இன்னும் என் மேனேஜர் வரல.மீட்டிங் ல வேற இரண்டு மணி நேரம் பேசணும்...
உதடெல்லாம் உலர்ந்திடும்..அதான் கொஞ்சம் ஈரம் உன்ட வாங்கிக்கலாம் னுதான்
ஆபீஸ் ல செல்போன் ல பேசுனாதான் எல்லாம் ஒரு மாதிரி பார்ப்பாங்க...இப்ப ஓகே..."
"ஒரு நிமிஷம் இருங்க..
ஐஸ்கிரீம் சாப்பிட்டுகிறேன்..
அப்பதான் ஈரம் இனிப்பா இருக்கும்.."
"சரி சரி...ஈரம், இனிப்பு, சூடு மூனும் இருக்கணும். 3 ரோசெஸ் மாதிரி..."
"ஆபீஸ் ல இருக்கப்ப பேசுற மாதிரியா பேசுறீங்க..."
"சரி சரி..மேனேஜர் வரார்..நான் ப்ரீ ஆ இருக்கப்ப கூப்பிடுறேன்.
சிரித்த படியே வைத்தான்..மேனேஜர் கு ஹலோ சொல்லிவிட்டு எழுந்து நடந்தான்...

மேற்கே - II :
காலை எழுந்தவுடன் செல்போன் எடுத்து பார்த்தாள்.வாய்ஸ் மெசேஜ் இருந்தது.அவன்
வந்து கொண்டே இருப்பதாகவும், வந்து இறங்கியவுடன் அழைப்பதாகவும் சொல்லிருந்தான்.
உடனே அழைத்தாள்.சுவிச் ஆப் செய்யபட்டிருந்தது.தெரிந்தும் பலமுறை மீண்டும் அழைத்து பார்த்தாள்….பதில் இல்லை.

சில நிமிடங்கள் கழித்து செல்போன் அலறியது.ஆர்வமாய் எடுத்தாள் அவன் எண்ணை எதிர்பார்த்தபடியே அது அவனிடமிருந்து இல்லை.வேறு யாரோ இருந்தார்கள்.மனதை திடப்படுத்திக் கொள்ள சொன்னார்கள்.எதிர்பாராத ஒரு விபத்தில் அவன் இறந்து விட்டதாகவும்.பயணப்பதிவில் அவன்தான் என உறுதி செய்ததாகவும்
கூறினார்கள்.செல்போன் கீழே விழுந்து நொறுங்கியது.அவளும் தான்.பதினைந்து நிமிடங்களுக்கு மேல் மயக்கத்தில் இருந்தாள். எழுந்தவுடனே அவன் புகைப்படம் முன்னே வந்து அழுதாள்.அதில் அவன் சிரித்துக் கொண்டு இருந்தான்.

வந்தவர்களெல்லாம் ஆறுதல் கூறினார்கள்.எல்லாத்தையும் மறந்து விட சொன்னார்கள்.
சிலர் விதி என்றார்கள்.சிலர் சதி என்றார்கள்.சிலர் அமைதியாக அழுதார்கள்.சிலர் அழுது அழுது அமைதியானார்கள்.வற்றிய குளம் வானம் பார்ப்பதை போல் அவள் கண்கள் எங்கேயோ வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.

நாட்கள் நகர ஆரம்பித்தது.


கிழக்கு - || :

"என்ன பண்ற ? "
"சும்மாதான் இருக்கேன்..ஒரு தொல்லை பேசி அழைப்புக்காக காத்திட்டு இருக்கேன்..."..."நீங்க என்ன பண்றீங்க"

"அப்படியா...அவசரமா ஒரு விஷயம் கேக்கணும் அதான் கூப்பிடறேன்.கேட்டுட்டு வைச்சிடுறேன். இங்க ஆபீஸ்ல ஒருத்தி அழகா இருந்தா.அரைமணி நேரம் பேசுனோம்.காபி எல்லாம் சேர்ந்து குடிச்சோம்.அவளுக்கு என்னை ரொம்ப புடிசிடிச்சி போல.டின்னெர் போலாம்னு கேட்டாள்.அதான் எந்த ஹோட்டல் போலாம்னு என் தோழிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன்..எந்த ஹோட்டல் போக.."
"கோர்ட்-யார்ட்-டிவோர்சே-யார்ட்"
"கோர்ட்-யார்ட்-மாரி-யார்ட் தான் கேள்விபட்டிருக்கேன்...இது புதுசா இருக்கும் போல இருக்கே...
"போங்க ...நான் போன் ஐ வைக்கிறேன்"
"ஏய் ..வைக்காத..நேத்து ப்ரீ ஆ இருந்த மாதிரியே ..இன்னைக்கு கொஞ்சம் ப்ரீ ஆ இருக்கேன்..
ஆனா அடுத்த வாரம்லாம் ..ஓவர் பிஸி ஆகிடுவேன் போல இருக்கு...அதான் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பேசிட்டு இருக்கேன்...அப்புறம் லேடி பத்தி சொன்னது உண்மை...ஆனா அந்த லேடிக்கு உன்னைவிட மூணு
மடங்கு வயசதிகம்..டீம் டின்னெர் போறோம்னுதான் நான் காலைல சொன்னேன்ல அதான்.."


மேற்கே - III

அவனை பற்றிய பேச்சுகள் குறைந்து...அவளை பற்றி பேச்சுகள் அதிகமாக இருந்தது "இந்த சின்ன வயதில் அவளுக்கு இப்படி நேர்ந்ததென்று".உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவோ அழைத்தும் அந்த வீட்டைவிட்டு வர மறுத்துவிட்டாள்.

திருமணம் முன் தனியாக இருந்து அதிகமாய் பழக்கப் படாதவள், பின்பு அவனுடன் அல்லது அவனுடனான நினைவுகளுடன் மட்டும் நேரம் கடத்தப் பழகியிருந்தாள்.கடினம் தான் , ஆனால் மீண்டுவிடுவேன் என்று கூறியிருந்தாள்.

கடந்த கால சோகங்களில் நீடித்து நிலைப்பது மரண இழப்பு மட்டுமே.கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாள்.ஆனாலும் வீட்டில் இரண்டு, மூன்று பொருட்களை தவிர மற்ற எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் அவனை நியாபக படுத்திக் கொண்டே இருந்தது.திடீரென அந்த எண்ணம் தோன்றியது.அவன் சம்பத்தப்பட்ட அனைத்து பொருள்களையும் படுக்கையறையில் சேர்த்தாள்.”திருமண புகைப்படம் முதல் திங்ககிழமை கடைசியாய் வாங்கின பூங்கொத்து வரை, அவன் உபயோகபடுத்திய கணிப்பொறி முதல் காலுறை வரை, அவனுடம் முகம் பார்த்த கண்ணாடி முதல் , அவனுடம் அகம் சேர்த்த கட்டில் வரை, கடைசியாய் கையசைத்த காட்சி முதல் இடியாய் காதில் கேட்ட காட்சி வரை”.

இவையனைத்துடன் ,அவளுக்காக அவள் வாங்கிய அதையும் அறைக்கு எடுத்து வந்தாள்.

கிழக்கு - |||

" ஹேய் ஹேய் ...ப்ளீஸ் போன் ஆ கட் பண்ணாத...."

திரும்பவும் கூப்பிட்டான்...அவள் எடுக்க வில்லை...பதினெட்டாவது முறை கூப்பிட்டான்..."

அவள் எடுத்தாள்..ஆனால் பேசவில்லை ..பொய்கோபம் அடக்கி கொண்டு பேச ஆரம்பித்தாள்

"சரியா பேசி மூணு நாள் ஆகுது...வெள்ளிகிழமையே வேலை முடிஞ்சிடும் சொன்னீங்க...

இன்னைக்கு திங்க கிழமை ஆச்சி......"

அவன் குறுக்கிட்டான்..." நாளைக்கு காலைல உன் முன்னாடி

நான் நிக்கலேன்னா ..அப்புறம் நீ கேளு”

சாயங்காலமே மேனேஜர் சொல்லிட்டார்.."நாளைக்கு காலைல

விமானம் புடிக்கிறீங்க..எல்லாத்தையும் மறக்குறீங்க ....ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க...அப்படியே பிரசன்னாவிடம் ஒரு சாரி சொல்லிடுங்க..."...

“அப்புறம் இன்னொரு முக்கியமா விஷயம் ...நீ சொன்ன திட்டா கூடாது”...

"சொல்லுங்க சார்" ....

"ம்...அதாவது...இன்னும் இன்னைக்கு ஹோம் வொர்க் முடியல...கொஞ்சம் வொர்க் பெண்டிங் ல இருக்கு"....நான் வேலைய முடிச்சிட்டு கூப்பிடுறேன்.மணி இரவு ஒன்பது பதினொன்று.வீட்டில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தன.விளக்குகள் கூட்டத்திற்கு உகந்தது.இருட்டு மட்டுமே தனிமைக்கு
உகந்தது.செல்போன் கையிலே இருந்தது.அவனுடைய அழைப்பிற்குதான் காத்திருக்கிறாள்......

அனைவரின் நெஞ்சதையும் உலுக்கிய சம்பவம் தான் கிழக்கு - IV

அவளின் நெஞ்ச உளைச்சலின் சம்பவம் தான் மேற்கு - IV ...

அவன் வேலை முடிச்சிட்டு விடியகாலையில் கடைசியா ஏறியது 'flight 11 from Boston to Los Angeles'.....(http://en.wikipedia.org/wiki/American_Airlines_Flight_11)

அவ கடைசியா எடுத்துட்டு போன அந்த பொருள் ..வேறொன்னுமில்லை ' ஒரு முழு நீள கயிறு...'(http://www.usc.edu/student-affairs/dt/V144/N40/01-stu.40c.html)

தாக்குதலின் தாக்கத்தால்,

செல்வேந்திரன்.









No comments: