Friday, January 22, 2010
வெயில் பிரதேசமும், குளிர் பிரயாணமும் :
நம்மூர் மழையினை நியாபகங் கொண்டு
வானத்தின்கீழ் வலக்கை நீட்டியவன்
கடனாளிக் குளிரின் பனிதூவலை
உள்ளங்கை வாங்கியுயரே எறிகிறேன்
வாரத்தில் சிலநாள் வானமே பார்த்திராதவன்
தினமுறங்கு முன்னும் விழித்த பின்னும்
weather.com விசாரித்தே
வேலைக்கு விரைகிறேன்
வெள்ளத்தில் வீடே மிதந்த போதும்
வேடிக்கையாய் பாம்படித்தவன் வெள்ளை
பனியில் மூழ்கிய காரினை
விரைக்க விரைக்க புதையலெடுக்கிறேன்
மெலிதான மழையில் கண்மூடி
உடல்நனைந்து அமுதம் குடித்தவன்
மிதமான பனித்தூறலில் உடல்மூடி
கண்திறந்து குளிர் உண்கிறேன்
அதிகமாய் பெய்து பலிகள்சில
ஆனபோதும் எம்மழையை கடுஞ்சொல்
கூறிய தில்லை
மழைக்கு அடுத்ததாய் ஆகிவிட்ட
மமதையில் நிற்காமல் நீடிக்கிறது
இரண்டாம் பிள்ளை....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment