
Monday, February 22, 2010
முகம் நிமிரும் நொடி...

Wednesday, February 03, 2010
சிறு ஒளி ! பெரு மகிழ்ச்சி !!

Friday, January 22, 2010
தவற விட்ட பயணச்சீட்டு

பேருந்து பயணத்தில்
வேண்டுமென்றே உரசியவனை
வேகத்தில் முறைத்தும் வைத்தாள்
வேதனையை மறைத்தும் வைத்தாள்
மடித்த புடவை மடிப்பினை
மறைக்குமிடம் அனுப்புமுன்
முதுகினில் முத்தமிட்டே முன்புறம்
உதவும் கையினை நினைத்துவிட்டாள்
தனை அணைக்க தானில்லை
பொங்கியது போதுமென
அடுப்பினில் வெந்த பாலை
அமைதியாய் அனைத்து வைத்தாள்
பெற்றவரின் பெருமையை நினைவிலேற்றி
ஒற்றை கடிதமதை நிராகரித்து
உரிய வரனின்று அமையாமல்
ஊமையாய் அழுது வைத்தாள்
வெயில் பிரதேசமும், குளிர் பிரயாணமும் :

நம்மூர் மழையினை நியாபகங் கொண்டு
வானத்தின்கீழ் வலக்கை நீட்டியவன்
கடனாளிக் குளிரின் பனிதூவலை
உள்ளங்கை வாங்கியுயரே எறிகிறேன்
வாரத்தில் சிலநாள் வானமே பார்த்திராதவன்
தினமுறங்கு முன்னும் விழித்த பின்னும்
weather.com விசாரித்தே
வேலைக்கு விரைகிறேன்
வெள்ளத்தில் வீடே மிதந்த போதும்
வேடிக்கையாய் பாம்படித்தவன் வெள்ளை
பனியில் மூழ்கிய காரினை
விரைக்க விரைக்க புதையலெடுக்கிறேன்
மெலிதான மழையில் கண்மூடி
உடல்நனைந்து அமுதம் குடித்தவன்
மிதமான பனித்தூறலில் உடல்மூடி
கண்திறந்து குளிர் உண்கிறேன்
அதிகமாய் பெய்து பலிகள்சில
ஆனபோதும் எம்மழையை கடுஞ்சொல்
கூறிய தில்லை
மழைக்கு அடுத்ததாய் ஆகிவிட்ட
மமதையில் நிற்காமல் நீடிக்கிறது
இரண்டாம் பிள்ளை....
Thursday, October 09, 2008
நிறங்கசியும் இலைகள் !

ஒரு தாய் வயிறானாலும்
வெவ்வேறு நிறத்தில் குழந்தைகளாய்
நிலத்தாய் வளர்க்கும்
மரங்கள் வண்ணக் கலவைகளாய்
எழுவண்ண வானவில்லின் வண்ண
அம்புகளாய் கூர்மரங்கள்
மணிக்கணக்கில் மனங்குளிர
மஞ்சள் வெயில் நிறமரங்கள்
நிறப்போட்டியில் நின்று தோற்று
மரந்தள்ளி மண்வந்த பச்சோந்தி ஒன்று
காய்ந்த இலை மிதித்து
காயந்தனை ஆற்றியது
நிழல்கசியும் மரத்தின் கீழ்
நிலங்கசியும் வேரின் மேல்
நிறங்கசியும் இலைகளைக் கண்டு
நீர்கசிய குளித்தேன் இன்று
நிறம் பேசிய மனிதர்தனை
வெறுத்த மனம்
நிறம் பூசிய மரங்கள் தனை
ரசித்ததின்று ! முழுதாய் மறந்து நின்று !!
Sunday, September 28, 2008
மழை இரவு
இன்று மட்டும் எடைகூடி
அசையாமல் நிற்கும் அடர்மரங்கள்
இமை மூடும் சுகம் கூடி
நனைவதால் எனக்கேது குளிர்சுரங்கள்
நீர் கலந்த தேன்
சுவைக்கும் வண்டுகள்
வசை பாடுமென
வாடும் சில மலர்கள்
இரவின் சுகம் கூட்டும்
பாடல்கள் இங்கில்லை
இலையில் உன் மெல்லிசை
காதோரம் ஈர்க்கும் வரை
எப்பொழுதோ சேதங்கள்
ஏற்படித்தி இருந்தாலும்
கவிதையாவது
காதலியின் நினைப்பும்
மழையின் நனைப்பும்
கவனிக்கவோ கலைக்கவோ
யாருமில்லை ...ஆதலாலே
அழகாய் இருக்கிறது
இரவும் மழையும் தனிமையும்
Monday, September 08, 2008
மழை
Thursday, September 04, 2008
அந்நிய நாட்டில் அகதியா
சொர்கமே என்றாலும் நம்மூரை
போல வருமா ...அதற்காய்
அயலகத்தில் வாழும் வரை
நரகத்தில் வாழ்வதாகுமா
உண்ணாத குழந்தைக்காய்
மனைவியை திட்டுவாய்
உணவு பிடிக்கவில்லையென
தொலைபேசியில் புலம்புவாய்
தமிழை பேசுபவன் தமிழன்
ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயன்
இரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்
பேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்
சொத்து தகராறில் தம்பி
வெட்டி கொலைக்கும்
எல்லைத் தகராறில் வீரர்
சுட்டுக் கொலைக்கும்
வித்தியாசம் நிலத்தின் சுற்றளவே
வித்தியாசம் மனத்தின் சுற்றளவே
ஈழத்தில் உன்னினம் எரியும்
பொழுது கொதிக்கும் நெஞ்சுதனை
ஒத்ததே ஒரிசாவில் கிறிஸ்துவனை
எரிக்க கண்ட உலகவ்வினம்
நாடென்பது நிர்வாகத்திற்காய்
பிரித்ததாகும்
மனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு
உரித்தாகும்
சுவாசிக்க காற்றளிக்கும்
கண்டமெல்லாம் என் கண்டமே
நதியின் கரைத்தாலும் உலகக்கடலில்
கலக்கு மென் பிண்டமே
Thursday, August 28, 2008
சந்திர கிரகணம் !
Tuesday, August 26, 2008
புவி சுழற்சி !
அலைகிறார்களாம் விஞ்ஞானிகள்
என்னிடம் கேட்டால் சொல்லிவிட போகிறேன்
நீ இருக்கும் புவிபாதி ஓடி ஒளிகிறது
அதை மறுபாதி தேடி அலைகிறது.
யதார்த்தம் !
இன்று பார்த்து பாராட்டிய பின்தான்
பின்னூட்டம் வராத கவிதையின்
கவலை கலைந்தது...
Wednesday, July 30, 2008
கதா நயாகனா ? காகம் நாயகனா ?

கோளாறு என்னவென யோசிக்கும் முன் பார்த்தால் கீழாறு
குட்டிக்கரணங்கள் அடித்திருக்க முடியாது
அவன் விழ்ந்த வேகம் பார்த்த
வேகமாய் ஓடுகிறான் என்றபடியே வெயிலில்
மெதுவாய் நகர்ந்தது சூரியன்....
சூரியனின் உள்மனதில் இன்னொரு எண்ணமும் ஊஞ்சலாடியது
கொடுத்து வைத்தவன் நிழல் அவனுக்குண்டு ...
காற்றின் பெருமை அன்றுதான் புரிந்தது.
வீழும் வரையாவது உயிர் வாழட்டுமென
வீட்டை விட்டு ஓடிய மகனை நினைத்த தாய்
ஆற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால்
அவன் ஆயுளின் நீளம் அதிகமாக இருந்தது..
திரவத்தில் வீழ்ந்தாலும் திடமாய் இருந்தது அவன் மனது ..
உயிர் பிழைப்போமென..
சுடும் காற்றில் வந்த கதகதப்பாலும்
ஆற்றில் நனைந்த சொதசொதப்பாலும்
மயக்கம் உறக்கமாய் மாறியது
அவன்தான் நம் கதையின் நாயகன் ஆயிற்றே
ஆற்றினருகே உள்ள குழியில்
இவன் கண் விழித்ததும்
தந்தை பணிக்கு சென்றது பணியாத பிள்ளைகள் போல
சருகுகள் அங்குமிங்கும் பறந்தன..
இத்தனிமை சிறைவாசம் எத்துனை மணித்துளிகள்
எத்துனை நாழிகைகள் என்றே தெரியவில்லை அவனுக்கு
இருட்டு இவ்வுலகை ஆக்ரமிக்கும் போட்டியாக
அக்குழியை ஆக்ரமித்தது ஆற்றின் ஓரமாய் ஒழுகிய நீர்
பசித்த அவனுக்காக பாட்டு பாட
பாரதியார் இல்லையங்கே ஜகத்தினை அழிக்க வேண்டாம் !
தாகத்தையாவது தீர்ப்போமென
தண்ணீரை தீர்க்க ஆரம்பித்தான்
குழிஎங்கும் நீர் பரவியது போல்
அவன் உடலெங்கும் வழி பரவியது
உடலெங்கும் வீக்கம் ! உயிர் வாழும் ஏக்கம்
உடனே அக்குழியை விட்டு வெளியேற துடித்தான்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமது போல
தண்ணீர் கரைத்து கரைத்து திட மண்ணும் சேறாய் மாறியது
அதனுள் புதைந்த அவன் கால்கள்
மண்ணுள் புதைந்த வேர் போல மறைந்தது
முதலில் வந்தது தலை
விதையை விட்டு வந்த முதல் இலை
சுதந்திர போராட்டம் கூட சீக்கிரம் முடிந்திருக்கும்
அவ்வுயிர் வெளிவரும் போராட்டம் தொடர்ந்து
வழுவிழந்தவனை வம்பிற்கு இழுப்பது போல் வீசியது காற்று
கோளாறு என்னவென யோசிக்கும் முன் பார்த்தால் கீழாறு
தாய் கண்ணீர் !

கருவாய் நீ உருவாகியதை
கணவனிடம்கண்ணால் கூறும்பொழுது வரும் ஆனந்த நீர்
அடிக்கடி தடவிப் பார்த்து எப்படி தவிக்கிறாய்
என்றபொழுது குவளையாக வரும் கவலை நீர்
புரண்டு படுத்தால் புண்படுமென
ஒரே நிலையில் படுப்பதால் வரும் பாச நீர்
எட்டி உதைக்கும் பொழுது உன் கால்
வலிக்குமென உருகும் நொடியில் அது உன்னத நீர்
பத்து மாதம் பையிலிருந்த நீ
பக்கத்தில் படுத்தவுடன் வந்த பொன்நீர்
உன்னலழுகையின் காரணமறிந்து ஊட்டுவாள் தாய்ப்பால்
அழுகை சத்தம் அனைத்தும் சத்தமாய் மாறும்பொழுது அது அன்பு நீர்
பள்ளிப்பாடம் செய்யாமல்
தடியடி வாங்குவாய் தந்தையிடம்
அறிஞர்கள் கூட ஆடி போவார்கள்
அடிபடாமல் அழமுடியமா என உன்தாய் பார்த்து
நீ பரிட்சைக்கு படிக்கும்பொழுது அவள் படிப்பாள் உன்னை
உறக்கம் உன் கண்ணை வருடும் நேரம் உனெதிர்காலம் நினைத்து ஊமைக்கண்ணீர் வடிப்பாள் உன் அன்னை
கல்லூரி காதலில் கவலையுடன் தாடி வளர்ப்பாய்
காரணம் கேட்ட கணவனிடம் மூடி மறைத்து
பின் தலையனை மூடி மறைத்து முகம் நனைப்பாள்
வேலை கிடைக்காத விரக்தியால் நொடிந்து போவாய்
நொடி நொடியே நினைத்து கண்ணீர்
படிகமாகும் அவள் கன்னம்
மனைவியின் பேச்சுக்கு மறுமொழி பேசமாட்டாய்
சிறுவயதில் நீ எப்பொழுது பேசுவாய் என்ற ஏக்கம்
மீண்டும் வருவதால் வரும் அமைதிக் கண்ணீர்
முதியோர் இல்லம் சேர்ந்த பின்
முடிவிலா கண்ணீர் விடுவாள்
தன்னிலை நினைத்துதான் இந்த தாய்நீர்
எனநினைப்பார் அருகிலிருந்த அகதியாகப்பட்டவர்கள்
உன் பின்னிலை நினைத்துதான் அந்த அழுகை
என்றவுண்மை அவள் மனம் மட்டுமே அறியும்
மரணப் படுக்கையிலும் மன்றாடுவாள் இறைவனிடம்
என் மகன் நலம் காப்பாயென
காலன் கடத்திச் சென்ற உந்தாயை நினைத்து
கடவுள் கூட கண்ணீர் வடிப்பான்
தாயின் பெருமையை உணர்ந்துவிடு
கவிதையின் தலைப்பை துடைத்துவிடு
Tuesday, July 29, 2008
காலம் கனியும்
Monday, July 28, 2008
சிறந்தது எது ?

சிறந்தது எதுவெனவறிய
திறந்தது மனது...
பரந்து விரிந்த வானம் பார்த்தேன்
பரவசமடைந்ததுதான் சிறந்தது என்றிருக்கையில்
எண்ணிலா கைகளால் என்னை தொட்டான் பகலவன்
ஆகா ...இவனல்லவோ இயற்கையின் இருமாப்பு
பட்டம் பகலவனுக்கே ...பார்த்தேன் மேலே ...
என்னை மறந்து விட்டாயே என்றது ஏக்கமாய்
அடடா...உன்னையா மறந்தேன்..
உன்னாலல்லவா ..
விவசாய பயிர்களும்
விவசாயி உயிர்களும் வாழுகின்றன..
மன்னிப்பாய் மேகமே என்று மன்றாடிய பொழுது...
சற்றே குளிர்ந்து பூமி..குனிந்தவன் நிமிர்ந்தேன்..
குறுநகை புரிந்தது நிலா ...புன்னகையிற் சிறந்ததேது....
கலகல சிரிப்பொலியில் கவனம் சிதறினேன் ..
ஒரு நகைக்கே உருகி விட்டாயே ..
இப்பொழுதென்ன சொல்கிறாய் ?
எகத்தாளம் செய்தனர் நட்சத்திர நண்பர்கள் ...
தவறான ஆராய்ச்சியில் ஈடுபட்டோமோ
தனியாக வருந்துகையில் .....
உயிரிருக்க புலன்களை பார்த்து பூரிக்கிறாயே
என்றனர் போட்டியாளர்கள் ...
ஆம்..உயிரே ..நீயே சிறந்தவள் என
அமைதியானேன் ஆராய்ச்சி முடிவுடன்...
Thursday, July 17, 2008
மரணம் நல்லது !

[the above photo is taken from google]
பூ மரித்தால்தான் காயும்,கனியும்
கனி மரித்தால்தான் விதையும், விருட்சமும்
குளிர் காற்றுடன் மேகம் விபத்தாகாமல் போனால்
ரத்தத்துளிகள் ஏதிங்கே பூமிக்கு
மண்புழு தூண்டில் தூக்கில் தொங்கியதால்தான்
இன்று வலைவீசி வாழும் வரை வந்திருக்கிறோம்
அலைகளின் மூச்சு அடங்காமல் போனால்
கரைகள் ஏது ! கால் நனைபெப்படி !!
சூளையில் செங்கல் தீக்கிரையாகாமல் போனால்
சூரிய வெப்பம் தாங்கும் கட்டிடங்கள் இங்கேது
தாவி வந்த தண்ணீர் துளிகள் தற்கொலைக்கு தயங்கினால்
கண்ணுக்கினிய அருவிகள் எங்கே
சிலநொடி வாழ்வதால்தான் வானவில்லுக்கு
தினம் சுற்றும் சூரியனை விட விசிறிகள் அதிகம்
பூகம்பம் பூமித்தாயின் கருவிற் கலைந்தால்தான்
கலங்காமல் கண்ணுறங்கும் கண்ணீர் விழிகள்
மழைத்துளி மண்ணில் புதைந்தால்தான்
நிலத்தடி நீர் நீடுடி வாழும்
ஆங்காங்கே செல்கள் மரித்தால் தான்
அழகான மச்சங்கள் அங்கத்திலே
மரணம் மட்டும் இல்லையெனில் இருக்குமா
குழந்தையின் பிறப்பு இனிமையாக
வேண்டும் ! நமக்கு இயற்கை மரணம்
வேண்டாம் !! நம்மால் இயற்கைக்கு மரணம்
இயற்கையாய் நிகழும் மரணம் எதுவும் தவறில்லை
நீ தவறினாலும் இயற்கைக்கு என்றும் மரணமில்லை
மரணம் நல்லது ! இயற்கை மரணம் நல்லது !!
Thursday, February 07, 2008
நடைபாதை நிகழ்வுகள் - 1
நான்கிதழ் பூ... சிறியதென முகம் சாய்ந்தது
கடந்து சென்ற குழந்தை கத்தியது
அம்மா எவ்வளவு பெரிய 'பூ'
Wednesday, October 31, 2007

குளித்துவந்த மனைவியை மீண்டும்
குளிக்க வைக்கும் கணவனாய்
காய்ந்திருந்த சட்டையை மீண்டும்
நனைத்தது மழை !
அவசரமாய் ஓடுகிறது மேகம்
தவறவிட்ட சில்லரைகளாய் மழைத்துளிகள்
சில்லரைகள் இல்லையென்றால் எல்லாம் கல்லறைதாம்
கல்லறை போகும்போது ஒற்றை சில்லரைதாம்
ஓசோன் ஓட்டையில் ஓலுகையில்
மனிதன்மேல் மனங்கசந்த மழை
சிறுகுழந்தை கைப்பட்டதும்
சிரித்து இறந்தது.
விழும் துளிகளை தட்டிதட்டி
நகைக்குது மழலை
வீழும் துளிகளை தட்டிதட்டி
பறக்குது பறவை
இரண்டும் மழைக்கின்முகம் காட்டுபவை.
அன்று நான் குளித்த அருவி
இன்று மழையில் தனியாய் குளிக்குமோ
இன்றைய என் மனித பிறவி
நாளைய மழையாய் மாறிப் பிறக்குமோ
மை தீர்ந்ததும்
கவிதையை முடித்தேன்
மழை தீர்ந்ததும்
கவிஞனைத் தொலைத்தேன் !
அன்புடன்
ந வ செல்வேந்திரன்.
Friday, July 27, 2007
பெயரில் என்ன இருக்கிறது ?

ஓய்வடையா ஓடை நீ
ஒரு நொடியில் நின்றதேன்
தேங்காய் சுமந்தாடும் தென்னையே
ஆடாமல் அயர்ந்ததேன்
சுட்டெரிக்கும் சூரியனே
சுபாவம் மாறி சொலித்ததேன்
மழைக்கரு சுமக்கும் மேகமே
மாம்ரம் கண்டதும் நின்றதேன்
அவசரமாய் சென்ற நான்
அடியாத்தி நின்றதேன்
ஓவியத்தில் ஓரோரமாய் தீட்டியிருந்த
அவள் பெயரினை மனம்படிக்க
அவளை நினைக்க சொல்லி
பின் அது அடம்பிடிக்க
இப்பெயரினை எங்கு பார்த்தாலும்
இமைக்காமல் இருநொடி நிற்பதேன்
ஆண்டுகள் பலவாயின் சளிக்காமல்
அவள் நினைவு இருப்பதேன்....
அன்புடன்,
செல்வேந்திரன்.
Tuesday, July 10, 2007
கவின் காட்சிக்கொரு இரங்கற்பா !

பலநாள் பெய்திருந்த பெருமழையில்
சிலதாய் மீந்திருந்த சிறுகிளையில்
அப்பொழுதாய் துளிர்த்திருந்த இலைநடுவில்
எப்பொழுதும் சிரித்திருந்த மலரின்மேல்
சமைந்தவளின் சருமத்தை முகர்ந்தவண்டு
மலரின் தேனமுதை சுவைத்ததின்று
விதவிதமாய் தேன்சுவையை கூட்டில்வைத்து
வரவேற்க வாசலிலே காத்திருந்தும்
கண்ணகியிற்பால் காதலுற்ற கோவ(ல)ண்டின்மீது
கொட்டிவிடும் கோபமுற்ற மாதவித்தேனீ
மதி மயங்கும் மாலையிலே
மழை ரசிக்கும் சோலையிலே
அரங்கேறியது அழகான சிலப்பதிகாரம்
அதைரசித்த புற்களின் ஆரவாரம்
திட்டமிட்டு நாடகம்தான் நடந்திருக்க
கோடாரியுடன் நடந்துவந்தான் கொடுங்கோலரசன்
கதைமுடிந்து கண்ணகிதான் எரிக்குமுன்னே
கயவனவன் எரிப்பதற்காய் வெட்டினானே
எரிந்துபோன மதுரையையே மீட்டிவிட்டோம்
எரியப்போகும் மரத்தினை மீட்கலையே
இரக்கபட்டு கோடாரியை இறக்கப்பா
இல்லையேல் இக்கவின்காட்சிக்கோர் இரங்கற்பா !!


